தமிழ்ச்சுரபி
தமிழ் இலக்கிய உலகிலும், இதழியல் வரலாற்றிலும் தனிச்சிறப்பு மிக்கதோர் இதழ், ‘அமுதசுரபி’ என்பது அனைவரும் ஏற்கும் ஒன்று. அதன் துவக்ககால அருஞ்சாதனைகளின் முதல் தொகுப்பு நூலாக மலர்ந்துள்ளது இந்த, ‘தமிழ்ச்சுரபி!’ அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக, ‘அமுதசுரபி’ ஆசிரியராகப் பணியாற்றிய விக்கிரமனே, இதைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். கி.ஆ.பெ.விசுவநாதம், யோகி சுத்தானந்த பாரதியார், பிஸ்ரீ., பெ.நா.அப்புசாமி, எஸ்.வையாபுரி பிள்ளை, க.நா.சு., டாக்டர் மு.வ., தி.ஜ.ரா., மா.ராசமாணிக்கனார், க.அ.நீலகண்டசாஸ்திரி, கி.வா.ஜ., பரலி.சு.நெல்லையப்பர் போன்ற புகழ்மிகு அறிஞர் பெருமக்களின் அரிய கட்டுரைகளும், உமாசந்திரன், துறைவன், கரிச்சான் குஞ்சு, பெ.துாரன், பி.எஸ்.ராமையா, ல.ச.ராமாமிருதம் போன்றோரின் சிறுகதைகளும் சோமு, தமிழழகன், குயிலன், தமிழ் ஒளி, தேசிக விநாயகம் பிள்ளை, சாண்டில்யன், சக்தித் கனல் போன்றோரின் கவிதைகளுமாய், அள்ளக் குறையாத அமுதசுரபியாகத் திகழ்கிறது, ‘தமிழ்ச்சுரபி!’– கவுதம நீலாம்பரன்